திருவான்மியூர், நவ. 27–
முன்னாள் மத்திய மந்திரி நாராயணசாமி இன்று காலை சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து விட்டு சொந்த ஊரான புதுச்சேரிக்கு காரில் சென்றார். பாதுகாப்பு போலீசார் காரின் முன்னே சென்று கொண்டு இருந்தனர்.
கிழக்கு கடற்கரை சாலை அக்கரை செக்போஸ்ட் அருகே வந்த போது சிக்னல் பழுதாகி இருந்தது. இதனால் நாராயணசாமியின் கார் மற்றும் பாதுகாப்பு போலீசாரின் கார்கள் மெதுவாக சென்றது.
அந்த நேரத்தில் சோழிங்க நல்லூர் நோக்கி வந்த டிப்பர் லாரி திடீரென நாராயணசாமி காரின் முன்னால் சென்ற பாதுகாப்பு போலீசாரின் காரின் முன்பகுதியில் பயங்கரமாக மோதியது.
இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. காரின் முன்பகுதி மட்டும் லேசாக நொறுங்கியது. வேகமாக வந்த லாரி நாராயணசாமியின் கார் மீது மோதி இருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் நீலாங்கரை போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். லாரி டிரைவர் சிவக்குமாரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து நாராயணசாமி சுமார் ½ மணி நேரம் தாமதமாக புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார். பாதுகாப்பு போலீசார் வேறு காரில் உடன் சென்றனர்.
0 comments :
Post a Comment