திண்டுக்கல், டிச.16–
பழனியை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் உடுமலைப்பேட்டையில் ஒரு நிறுவனம் நடத்தி வந்தார். அதன்மூலம் ஆன்–லைனில் ஒரு விளம்பரம் செய்திருந்தார். அதில் தனியார் நிறுவன விளம்பரங்களை அனுப்புவதற்காக ஆன்–லைனில் இ–மெயில் முகவரிகளை பதிவு செய்யும் பணி வழங்கப்படும்.
இதில் சேர்வோருக்கு மாத ஊதியமாக ரூ.2500 அளிக்கப்படும். பணியில் சேர டெபாசிட் தொகையாக ரூ.3250 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை பார்த்த மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த பணியில் சேர விண்ணப்பித்தனர். அவர்களிடம் இருந்து டெபாசிட் தொகையாக தலா ரூ.3250 வசூலிக்கப்பட்டது. மொத்தம் ரூ.1 கோடி வரை பணம் வசூலானது.
இந்த பணியில் சேர்ந்தவர்களுக்கு சில மாதங்கள் வரை ஊதியம் வழங்கப்பட்டது. இந்நிலையில் திடீரென ஊதியம் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதுபற்றி அவர்கள் கேட்டபோது அடுத்த மாத சம்பளத்துடன் சேர்த்து தருவதாக கூறியுள்ளனர்.
ஆனால் தொடர்ந்து சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நிறுவனத்தினரும் தலைமறைவாகி விட்டனர்.
இதனால் டெபாசிட் பணத்தை கட்டி ஏமாற்றம் அடைந்தவர்கள் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments :
Post a Comment