கோவை, நவ. 30–
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விமானம் மூலம் இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
குஷ்பு காங்கிரசில் இணைந்துள்ளார். அவரை வரவேற்கிறோம். கட்சி வளர்ச்சிக்காக அவர் காங்கிரசில் தன்னை இணைத்துள்ளார்.
குஷ்பு மூலம் காங்கிரஸ் கொள்கைகளை தமிழகம் முழுவதும் பரப்புவோம். மோடியை கடுமையாக விமர்சித்தால் வைகோ பாதுகாப்பாக திரும்ப முடியாது என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசியலில் கருத்துகள் தொடர்பாக விமர்சனங்கள் எழத்தான் செய்யும். அதற்காக வைகோவை எச்சரித்து எச்.ராஜா கூறியது அநாகரீகமான செயல்.
இந்தியா ஜனநாயக நாடு. காங்கிரசுக்கு நடிகர்கள் யார் வந்தாலும் வரவேற்போம். கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
இந்த பிரச்சினைக்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலின்போது பாரதீய ஜனதா கட்சியினர் நாங்கள் கருப்பு பணத்தை மீட்போம் என்றார்கள். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டதாக தெரியவில்லை. பொதுமக்கள் காலப்போக்கில் இதனை புரிந்து கொள்வார்கள்.
ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்கியதால் காங்கிரசுக்கு எந்த இழப்பும் இல்லை. 2016–ல் நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் யாருடன் கூட்டணி அமைக்கும் என்று கேட்கிறார்கள். தேர்தலின் போது எங்கள் தலைமையில் யார் வந்தாலும் வரவேற்போம்.
காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும்.
மேற்கண்டவாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
0 comments :
Post a Comment