ராயபுரம், நவ. 27–
வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே நேற்று நள்ளிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அவர், வியாசர்பாடி கணேசபுரத்தை சேர்ந்த பிரபு என்பது தெரிந்தது. முன்னுக்குப்பின் முரணாக பேசினார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்த போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். கைவிலங்கும் போடப்பட்டு இருந்தது.
இன்று அதிகாலை பிரபு கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்தார். அவர்கள் கைவிலங்கை கழற்றி ஒரு கையில் மட்டும் மாட்டி அனுப்பினர்.
நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. சந்தேகம் அடைந்த போலீசார் கழிவறைக்கு சென்று பார்த்தபோது பிரபுவை காணவில்லை. அவர் சுவர் ஏறிக்குதித்து கைவிலங்குடன் தப்பி ஓடி இருப்பது தெரியவந்தது.
அவர் தப்பி செல்வதற்கு காரணம் என்ன? குற்றச்செயலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவரா? என்று விசாரித்து வருகிறார்கள். அவரை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸ் நிலையத்தில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓடிய சம்பவம் போலீசாரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 comments :
Post a Comment