தஞ்சாவூர், டிச.8–
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடக அரசு ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும். ஆனால் அதன்படி இதுவரை கர்நாடக அரசு தண்ணீர் தரவில்லை. அங்குள்ள அணைகள் நிரம்பிய பின் உபரி நீர் மட்டுமே தமிழகத்திற்கு வருகிறது. இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் மேலும் 2 அணைகள் கட்டி 48 டி.எம்.சி. தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அணைகள் கட்டப்பட்டால் தற்போது வரும் உபரிநீரும் தமிழகத்திற்கு கிடைக்காமல் தமிழகம் பாலைவனமாகி விடும்.
கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை கண்டித்து ஏற்கனவே அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 22–ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 4–ந் தேதி 3 மாவட்டங்களிலும் ரெயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. நேற்று தே.மு.தி.க. சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்தக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டுக்குழுவை உடனே அமைக்க வலியுறுத்தியும், தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டம் மற்றும் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்தி பிரதமரை சந்திக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் த.மா.கா. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சி தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் தஞ்சை ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் டெல்டா மாவட்டத்தில் உள்ள கட்சி தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். அவர்கள் கையில் த.மா.கா. கொடியுடன் வந்து இருந்தனர்.
0 comments :
Post a Comment