நகரி, டிச. 7–
விஜயகாந்த் நடித்து பரபரப்பாக ஓடிய ரமணா பட பாணியில் பிணத்துக்கு டாக்டர்கள் மருத்துவம் பார்த்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரகாசம் மாவட்டம் பாப்பாயி பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் (30). கடன் தொல்லை காரணமாக இவர் விஷம் குடித்தார்.
ஆபத்தான நிலையில் அவரை உறவினர்கள் சீராளாவில் உள்ள தனியார் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் அனுமதித்தனர். நாகராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் 2 நாள் கழித்தே எதுவும் சொல்ல முடியும் என்றும் கூறினார்கள். மருத்துவ செலவுக்காக ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கட்டும்படி கூறினார்கள். அதன்படி உறவினர்கள் பணத்தை கட்டினார்கள்.
2 நாள் கழித்து மேலும் சிகிச்சை அளிக்க வேண்டும். ரூ.1 லட்சம் கட்டும்படி கூறினார்கள். அதற்கு நாகராஜ் உறவினர்கள் எங்களிடம் பணம் இல்லை. ஊருக்கு சென்று யாரிடமாவது கடன் வாங்கி கட்டி விடுகிறோம். நீங்கள் சிகிச்சையை அளியுங்கள் என்றனர்.
அதனை ஏற்க மறுத்த மருத்துவமனை நிர்வாகம், ‘‘பணம் இல்லாவிட்டால் நீங்கள் நோயாளியை குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள்’’ என்றனர்.
வேறு வழியின்றி உறவினர்கள் காமராஜை குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் நாகராஜ் இறந்து ஒருநாள் ஆகி விட்டது என்றனர்.
இதனால் நாகராஜ் உறவினர்கள் ஆவேசம் அடைந்தனர். நாகராஜ் பிணத்தை எடுத்து கொண்டு தனியார் ஆஸ்பத்திரி முன்பு கிடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆஸ்பத்திரி கண்ணாடி ஜன்னல்களை உடைத்து நொறுக்கினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பணத்துக்காக பிணத்துக்கு மருத்துவம் பார்த்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வற்புறுத்தினார்கள்.
போலீசார் தலையிட்டு சமசரம் செய்தும் போராட்டத்தை அவர்கள் கைவிடவில்லை.
டாக்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
0 comments :
Post a Comment