சென்னை, டிச.6–
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கோரியும், ராமர் கோவில் கட்டுவதற்கு பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் சென்னையில் பல இடங்களில் பா.ஜனதா, இந்து முன்னணியினர் மற்றும் விசுவஇந்து பரிஷத், இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
எழும்பூர் லாயிட்ஸ் கார்டன் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விசுவ இந்து பரிஷத் மாநகர அமைப்பாளர் முருகேசன் தலைமை தாங்கினார். பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் தனசேகரன், தொகுதி தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்க வேண்டும், ராமர் கோவில் கட்டியே தீருவோம் போன்ற கோஷங்கள் எழுப்பினர்.
தாம்பரம் பஸ் நிலையம் அம்பேத்கார் சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் குமார், பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் வேதசுப்பிரமணியம், கே.பி. ராகவன், ஆடிட்டர் பாலாஜி, பிரபாகரன் உள்பட 60–க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.
மாதவரம் மண்டல அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாதவரம் தொகுதி இந்து முன்னணி தலைவர் வெங்கடேசன், பொதுச் செயலாளர் மதிவாணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். 50–க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்கள்.
இதுதவிர வில்லிவாக்கம், கொரட்டூர், ராயபுரம், தேனாம் பேட்டை, புளியந் தோப்பு உள்பட 17 இடங்களில் இந்து அமைப்பினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதையொட்டி 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
0 comments :
Post a Comment