பெங்களூர், டிச. 8–
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும் அபராதமும் விதித்தது.
தீர்ப்பை எதிர்த்து 4 பேர் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அப்போது இந்த வழக்கின் மேல் முறையீட்டு ஆவணங்களை 3 மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மனு மீதான விசாரணையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரின் வக்கீல்களும் மேல் முறையீட்டு வழக்கு தொடர்பான ஆவணங்களை நகல் எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 2 மாதமாக நடந்த இந்த பணி நேற்றுடன் முடிவடைந்தது.
மொத்தம் சுமார் 2¼ லட்சம் பக்கங்களை கொண்ட ஆவணங்கள் புத்தக வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்வதற்காக நேற்று இரவு ஆவணங்கள் போயஸ் கார்டனில் இருந்து பெங்களூர் எடுத்துச் செல்லப்பட்டன.
இன்று காலையில் ஆவணங்கள் பெங்களூரில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பகல் 12.15 மணிக்கு அவை ஐகோர்ட்டில் உள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஜெயலலிதா வக்கீல் பன்னீர்செல்வம், செந்தில் மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது வக்கீல்கள் இந்த ஆவணங்களை தாக்கல் செய்தனர்.
பதிவுத்துறை அதிகாரிகள் சரிபார்த்து ஆவணங்களுக்கு எண்கள் வழங்க 2 நாட்கள் ஆகும் என்றும் அதன்பிறகு 17–ந்தேதி அப்பீல் மனு மீதான விசாரணை தொடங்கும் என்றும் தெரிகிறது.
0 comments :
Post a Comment