மும்பை, டிச. 5–
அடுத்த ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி ஆஸ்திரேலியா– நியூசிலாந்தில் நடக்கிறது. இதற்கான 30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த உத்தேச அணியில் இருந்து 15 பேர் கொண்ட இந்திய அணி ஜனவரி 7–ந்தேதிக்குள் இறுதி செய்யப்படும்.
உத்தேச அணியில் சீனியர் வீரர்களான ஷேவாக், கவுதம் காம்பீர், யுவராஜ்சிங், ஜாகீர்கான், ஹர்பஜன்சிங் ஆகியோர் இடம் பெறவில்லை.
இதனால் இவர்கள் இனிமேல் இந்திய அணியில் இடம் பெறுவது ஏறகுறைய முடிந்துவிட்டது. பார்மில் இல்லாததால் அவர்களை தேர்வு குழுவினர் ஓரம்கட்டிவிட்டனர். இளம் வீரர்கள் பலருக்கு உத்தேச அணியில் இடம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் உலக கோப்பை உத்தேச இந்திய அணி சரியானதே என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–
உலககோப்பை உத்தேச அணியில் இளம் மற்றும் பார்மில் உள்ள வீரர்கள் மீது கவனம் செலுத்தி தேர்வு குழுவினர் வாய்ப்பு அளித்துள்ளனர். அவர்கள் வெறும் பயணிகளை (ஷேவாக், காம்பீர், உள்பட 5 பேர்) அனுப்ப விரும்ப வில்லை.
சீனியர் வீரர்கள் தேர்வு செய்யப்படாதது ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் பார்மில் இல்லை. உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை. உள்ளூர் போட்டியில் திறமையை நிரூபித்து இருந்தால் பெயர்கள் பரீசிலிக்கப்பட்டு இருக்கும். அனுபவம் விலை மதிப்பற்றது தான். குறிப்பாக வெற்றி கட்டாயத்தின் போது அது தேவை.
ஆனால் அவர்கள் ஆட்டத்திறனுடன் இல்லை. இதனால் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாக கருத வில்லை. அவர்கள் உள்ளூர் போட்டியில் சதங்களை விளாசினால் அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த உலக கோப்பையை (2011) வென்ற இந்திய அணியில் சீனியர் வீரர்களான ஷேவாக், காம்பீர், யுவராஜ்சிங், ஜாகீர்கான், ஹர்பஜன்சிங் ஆகியோர் இருந்தார்கள்.
தற்போது இவர்கள் ஓரம்கட்டப்பட்டுள்ளதால் அணியின் கதவுகள் மூடப்பட்டு விட்டதாகவே கருதப்படுகிறது.
0 comments :
Post a Comment