தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நள்ளிரவு முதல் பாதிக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் இயங்கத் தொடங்கியது.
பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் தொழில்நுட்ப கோளாறை சரி செய்துவிட்டதாகவும், இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் இயங்கத் தொடங்கியது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, 044 - 71709009 என்ற மாற்றுத் தொடர்பு எண் திரும்பப் பெறப்படுவதாகவும், வழக்கம்போல் அவசர உதவிக்காக 108-ஐ நாடலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, தொழில்நுட்ப கோளாறு காரணமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பாதிக்கப்பட்டது. அதையடுத்து, பொதுமக்கள் அவசர தேவைக்காக மாற்றுத் தொடர்பு எண் அறிவிக்கப்பட்டது.
இது குறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ், 'தி இந்து' விடம் கூறுகையில், "நேற்று நள்ளிரவு முதல் 108 சேவை மையத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளில் கோளாறு ஏற்பட்டதால், தொலைபேசி அழைப்புகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இது தற்காலிகமானதே. விரைவில் கோளாறு சரிசெய்யப்படும். அவ்வாறு சரிசெய்யப்பட்ட பின்னர் அது மீண்டும் தெரிவிக்கப்படும். அதுவரை மக்கள் அவசர தேவைக்கு 044- 71709009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.
இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நள்ளிரவு முதல் பாதிக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் சேவை சரிசெய்யப்பட்டு மீண்டும் புதன்கிழமை காலை 10.30 மணியில் இருந்து வழக்கம்போல் தடையின்றி இயங்கத் தொடங்கியது.
0 comments :
Post a Comment