‘‘இந்திய அளவில் பெரிய அடையாளம் கிடைத்துவிட்டது. இந்நிலையில் ஏன் இன்னும் கமர்ஷியல் படங்களையே எடுக்கிறீர்கள் என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். இப்படித்தான் படம் பண்ண வேண்டும்! இதை முறியடிக்க வேண்டும்? என்றெல்லாம் எதுவுமே இல்லை. இங்கே என் திறமையை காட்டுவதற்கு மட்டுமே படம் எடுக்க முடியாது. ஒவ்வொரு படத்தை தொடங்கும்போதும் ஹீரோ, தயாரிப்பாளர் ஆகிய முக்கியமான இருவர் என்கூடவே ஓடி வருகிறார்கள். நாங்கள் மூவரும் சேர்ந்து டிசைன் பண்ணக்கூடிய விஷயமாகத்தான் அது அமையும். எந்த நேர்க்கோட்டில் மூவரும் ஓ.கே ஆகிறோமோ, அந்த இடத்தில் இருந்து படத்துக்கான வேலையைத் தொடங்குகிறோம்’’ என்று அடர்ந்த தாடியை வருடியவாறே பேசத்தொடங்கினார், பிரபுதேவா.‘ஆக்‌ஷன் ஜாக்சன்’ படப்பிடிப்பில் சோனாக்‌ஷி சின்ஹா, அஜய் தேவ்கான் ஆகியோருடன் பிரபுதேவா
‘ஆக்‌ஷன் ஜாக்சன்’ படம் இன்னும் இரண்டு நாட்களில் ரிலீஸாகவுள்ளதால் திருப்பதியில் தரிசனத்தை முடித்துவிட்டு சென்னை வந்து, இங்கிருந்து மும்பைக்கு செல்லத் தயாராகிக் கொண்டிருந்தவரை சந்தித்து பேசினோம்.
‘ஆக்‌ஷன் ஜாக்சன்’ படம் ரிலீஸை ஒட்டி நீங்களும் படத்தின் ஹீரோவான அஜய் தேவ்கானும் பிரார்த்தனையில் இறங்கீட்டீங்களே?
பல இரவு, பகல்கள் படத்திலேயே ஊறிப் போயிருக்கிறோம். படம் எப்படி இருக்கிறது என்று இனி மக்கள்தான் பார்த்து சொல்லணும். என்னைப்போலவே அஜய் தேவ்கானுக்கும் ரொம்ப பிடிச்ச படம் இது. அவருடைய ‘சத்யாகிரகா’, ‘சிங்கம் ரிட்டன்ஸ்’ படங்களுக்கு பிறகு வருகிற படம். இதற்கு முன் வந்தப் படங்களிலிருந்து ரொம்பவே வேறு மாதிரியாக இருக்கும். இதில் உள்ள காமெடி, சண்டை, நடனம் என்று அவர் ஆடிப்பாடி ரொம்ப நாளாச்சு. அதனால்தான் அவரும் இந்தப்படத்தை ஒரு பிரேக் எனர்ஜியாக நினைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்.
‘ஆக்‌ஷன் ஜாக்சன்’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் ‘லிங்கா’, அமீர்கான் நடிப்பில் ‘பி.கே’ என்று முக்கியமான சில படங்கள் இம்மாதத்தில் தொடர்ந்து வருகிறதே? இது ‘ஆக்‌ஷன் ஜாக்சன்’ படத்தின் பிசினஸை பாதிக்காதா?
மக்களுக்கு பிடித்த மாதிரியான அம்சங்களோடு தான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம். தமிழ்நாட்டில் மட்டும் நடித்து, இயக்கி படம் வெளிவரும்போது மாநில வாரியான டென்ஷன் மட்டும்தான் இருந்தது. இப்போது இந்தியில் படத்தை இயக்கும்போது அந்த டென்ஷன் கூடியிருக்கிறது. மொத்தமாக 4000 அரங்குகளில் படத்தை வெளியிடுகிறோம். என்னில் தொடங்கி ஒவ்வொரு டெக்னீஷியனும் முழு திறமையை போட்டிருக்கிறோம். எல்லாமே சரியாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.
அடுத்து திகில் படம் ஒன்றை எடுக்கப் போறீங்களாமே?
இதை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சொல்லி வருகிறேன். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும்.
நம்ம ஆனந்தராஜ் தான் ‘ஆக்‌ஷன் ஜாக்சன்’ படத்தில் வில்லனாமே?
திடீரென ஒரு நாள் தோன்றியது. அவரை கூப்ப்பிட்டேன். கடினமான உழைப்பாளி அவர். ‘போக்கிரி’ படம் கூட இணைந்து செய்தோம். அதற்கு முன்பிருந்தே அவர் எனக்கு நெருக்கம், அவர்தான் லீட் வில்லன். அஜய் தேவ்கான் ரொம்பவே பாராட்டினார். படத்தில் மட்டும்தான் வில்லன். நிஜவாழ்வில் அவர் ரொம்ப மென்மையானவர்.
ஏபிசிடி - 2 படப்பிடிப்பு எந்த அளவில் உள்ளது?
டிசம்பர் இரண்டாவது வாரம் அதன் படப்பிடிப்புக்காக லாஸ் வெகாஸ் கிளம்பு கிறேன். படத்தோட முக்கியமான காட்சிகள் அங்குதான் படம்பிடிக்கப்படுகிறது. அங்கிருந்து திரும்பியதும் ஜனவரியில் ‘சிங் ஈஸ் பிளிங்’ வேலைகளைத் தொடங்கணும். ஆறு மாதங்கள்தான் ரிலீஸுக்கு டைம் இருக்கு. அதுவும் ஒரு வகையில் காஸ்ட்லியான படம். ஹீரோ அக்‌ஷய்குமார் தவிர முக்கியமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பார்க்கலாம்.
உங்களை வைத்து தங்கர் பச்சான் இயக்கிய ‘களவாடிய பொழுதுகள்’ படத்தின் ரிலீஸ் வேலைகள் இங்கே தீவிரமாக நடந்து வருகிறதே?
இன்று கூட இருவரும் 30 நிமிடங்களுக்கும் மேல் பேசிக்கொண்டிருந்தோம். நல்ல மனிதர். தங்கர் பச்சானின் உழைப்பு என்னை ரொம்பவே கவரும். நீண்ட நாட்களாக அவருடைய அன்பில் கட்டுண்டு இருக்கிறேன். ‘களவாடிய பொழுதுகள்’ விரைவில் ரிலீஸ் ஆகணும். ஒவ்வொருவரும் தவிர்க்கமுடியாத, கடந்து போன, போக நினைக்கும் காதல் கதை இது. இது முக்கோண காதல் கதை படம். அழுத்தமான மனப்பதிவாக அந்த காதல் களம் இருக்கும். அதற்காக நானும் காத்திருக்கிறேன்.
‘லிங்கா’ படத்தில் சோனாக்‌ஷி நடித்திருக்கிறாரே? அது பற்றி பகிர்ந்துகொள்வீர்களா?
தொடர்ந்து வேலைகள், அடுத்தடுத்து நடனம், நடிப்பு என்று பிஸியாக இருப்பதால் அதுபற்றி பேசுவதில்லை. அதுவும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்புக்கு முன்பே ‘ஆக்‌ஷன் ஜாக்சன்’ படத்தில் அவங்களோட 80 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.
ஒரே ஒரு பாடல் மட்டும்தான் அந்த நேரத்தில் மீதமிருந்தது. அதிலும் பேசுவதற்கு நேரமே இல்லை.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top