அடிலெய்டு, டிச.9–
இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. டோனி உடல் தகுதியுடன் இல்லாததால் இன்றைய டெஸ்டில் விளையாடவில்லை. இதனால் வீராட்கோலி கேப்டனாக டெஸ்டில் அறிமுகமானார். விர்த்திமான் சாகா விக்கெட் கீப்பராக இடம்பெற்றார். 3 வேகப்பந்து, ஒரு சுழற்பந்து வீரருடன் இந்தியா களம் இறங்கியது.
சுழற்பந்தில் முன்னணி வீரர் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. புதுமுக வீரர் கரண்சர்மா இடம் பெற்றார். இரு அணி வீரர்கள் விவரம்:–
இந்தியா: வீராட்கோலி (கேப்டன்), தவான், முரளி விஜய், புஜாரா, ரோகித்சர்மா, ரகானே, விர்த்திமான் சாகா, கரண்சர்மா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, வருண் ஆரோன்.
ஆஸ்திரேலியா: கிளார்க் (கேப்டன்), வார்னர், வாட்சன், சுமித், மிச்சேல், மார்க், பிரட் ஹாடின், மிச்சேல் ஜான்சன், பீட்டர்சிடில், ரியான் ஹாரிஸ், லயன்.
ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் ‘டாஸ்’ வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். வார்னரும், ரோஜர்சும் தொடங்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
வார்னர் தொடக்கத்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வருண் ஆரோன், ஷமி பந்தை விளாசினார். இஷாந்த் சர்மா தொடக்க ஜோடியை பிரித்தார். தனது 2–வது ஓவரில் அவர் ரோஜர்ஸ் விக்கெட்டை கைப்பற்றினார். அவர் 9 ரன்களே எடுத்தார். அப்போது ஸ்கோர் 50ஆக இருந்தது.
அடுத்து வாட்சன் களம் வந்தார். இஷாந்த்சர்மா பவுன்சர்களாக வீசி அவரை அச்சுறுத்தினார். அதே நேரத்தில் மறுமுனையில் இருந்த வார்னரின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
வாட்சன் 14 ரன்னில் ஆரோன் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 88ஆக இருந்தது. 3–வது விக்கெட்டுக்கு வார்னருடன் கிளார்க் ஜோடி சேர்ந்தார். ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 113 ரன் எடுத்து இருந்தது. வார்னர் 77 ரன்னிலும், கிளார்க் 9 ரன்னிலும் இருந்தனர்.
மதிய உணவு இடை வேளைக்கு பிறகு வார்னர் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். 106 பந்துகளில் 14 பவுண்டரியுடன் அவர் 100 ரன்னை தொட்டார். 33–வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 10–வது செஞ்சூரி ஆகும். இந்தியாவுக்கு எதிராக 2–வது சதத்தை பதிவு செய்தார்.
இதேபோல் ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க்கும் இந்திய பந்துவீச்சை விளாசி தள்ளினார். அவர் 69 பந்தில் 8 பவுண்டரியுடன் அரை சதத்தை தொட்டார்.
இருவரது ஆட்டத்தால் ரன் உயர்ந்தது. 41–வது ஓவரில் ஆஸ்திரேலியா 200 ரன்னை தொட்டது.
0 comments :
Post a Comment