ஆம்பூர், டிச.7–
கிருஷ்ணகிரியில் இருந்து வேலூர் நோக்கி மணல் ஏற்றி வந்த லாரி இன்று அதிகாலை 4 மணியளவில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர்–பள்ளிகொண்டா அருகே உள்ள காளப்புதூர் என்ற இடத்தில் வந்தது. அப்போது திடீரென லாரி பழுதடைந்து நின்றது.
அதே நேரத்தில் பின்னால் ஓசூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் லாரியின் பின்புறம் மோதியது. அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து சென்னைக்கு வந்த மற்றொரு பஸ்சும் ஓசூர் பஸ்சின் பின்புறம் மோதியது. இதில் 2 பஸ்களும் நொறுங்கியது. 2 பஸ்களும் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் ஓசூர் பஸ்சில் பயணம் செய்த பெங்களூர் பொம்மனஅள்ளி பகுதியை சேர்ந்த கோபால் மகன் ரங்கநாதன்(35) மற்றும் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
மேலும் 2 பஸ்களிலும் பயணம் செய்த 39 பேர் படுகாயமடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். பள்ளிகொண்டா போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டனர். இதில் 37 பேரை ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும், 2 பேர் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments :
Post a Comment