சேலம், டிச. 7–
சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள கொங்கு வெள்ளாளகவுண்டர் திருமண மண்டபத்தில் திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு திராவிடர் கழக செயலவை தலைவர் சு.அறிவுக்கரசு தலைமை வகித்தார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார். முன்னதாக அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பை மையப்படுத்தி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நோக்கத்தில் தி.மு.கவினர் பயிற்சி அளித்தனர், அதன்படி 200 பேர் முறையான பயிற்சி பெற்று இன்னும் வேலை கிடைக்காமல் காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி வருகிற மார்ச் மாதம் சென்னையில் ஒத்தக்கருத்துடைய அனைவரையும் திரட்டி மாநாடு நடத்த இருக்கிறோம். இதற்கு வலுவான போராட்டம் நடத்த இந்த மாநாட்டில் அறிவிக்கவும் உள்ளோம்.
கல்லணையை கட்டிய கரிகாற் சோழன் பெருவளத்தானுக்கு விழா எடுக்கும் வகையில் வருகிற பிப்ரவரி மாதத்தில் உழவர் பண்பாட்டு வாழ்வுரிமை திருவிழாவும் நடந்த உள்ளோம். காவிரியின் குறுக்கே மேகதாது என்ற அணையை கட்டுவதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை ஆளுங்கட்சி கூட்ட வேண்டும். அணை கட்டுவதற்கு எதிர்ப்பு குரல் கொடுக்க வேண்டும். இதற்கு அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். பொதுபிரச்சினைக்கு கர்நாடகாவில் அனைவரும் ஒன்று சேருகிறார்கள். கேரளாவில் ஒன்று சேர்ந்து குரல் தருகிறார்கள். ஆந்திராவில் குரல் கொடுக்கிறார்கள், இதுபோன்ற நிலை தமிழகத்தில் வரவேண்டும். உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கூட மது அருந்தும் நிலை உள்ளது. இதனால் முழு மதுவிலக்கை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளை கேட்டு கொள்கிறோம்.
தமிழ்நாட்டுக்குரிய நதி நீர் உரிமைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை மீறும் வகையில் நடந்து வரும் கர்நாடகம் மற்றும் கேரள அரசுகளை கட்டுப்படுத்தும் வகையில் உண்மையாக மத்திய அரசாக செயல்படவேண்டும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி அரசை கேட்டு கொள்கிறோம்,.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. மத்திய ரெயில்வே நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு என்று அறிவிக்கப்பட்ட ரெயில் திட்டங்களை பொருளாதார காரணம் காட்டி ரத்து செய்துள்ள மத்திய அரசை இப்பொது குழு கண்டிக்கிறது. ரத்து செய்யப்பட்ட திட்டங்களை காலதாமதமின்றி புதுப்பித்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை கேட்டு கொள்கிறோம் என்பது உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேறியது.
0 comments :
Post a Comment