சென்னை, டிச. 8–
நீலாங்கரை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கம் பெரியார் தெருவை சேர்ந்தவர் தனசேகர் (40). இவரது மனைவி மகாலட்சுமி (38). இவர்களுக்கு லாவண்யா (11) என்ற மகளும், பிரசாந்த் (9) என்ற மகனும் உள்ளனர்.குடியை கெடுக்கும் குடிப்பழக்கத்தால் தீக்குளித்து மனைவி தற்கொலை: காப்பாற்ற முயன்ற கணவரும் பலி
லாரி டிரைவரான தனசேகருக்கு குடிப்பழக்கம் உள்ளது. தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். இது மகாலட்சுமிக்கு பிடிக்கவில்லை. இதனால் கணவன்– மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
மகனும், மகளும் பெரிய பிள்ளைகளாகி விட்டார்கள். எனவே குடிப்பதை நிறுத்தி விடுங்கள் என மகாலட்சுமி பல முறை தனசேகரிடம் கூறியுள்ளார். ஆனால் தனசேகர் இதனை கேட்காமல் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வாடிக்கையாகவே வைத்திருந்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் லாவண்யாவும், பிரசாந்தும் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர்.
சமையல் செய்வதற்கு மட்டன் எடுத்து கொடுத்து விட்டு வெளியில் சென்ற தனசேகர் நன்றாக குடித்து விட்டு போதை தலைக்கேறிய நிலையில் வீட்டுக்கு வந்தார். இதனை மகாலட்சுமி கடுமையாக கண்டித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த தனசேகர், மகாலட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 2 பேரும் வீட்டுக்குள் வைத்தே நீண்ட நேரமாக சத்தம் போட்டுக் கொண்டே இருந்தனர்.
நீங்கள் இப்படி தினமும் குடித்து விட்டு வந்தால் இனி, நான் உயிருடன் இருக்க மாட்டேன். சாவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை என்று கூறிய மகாலட்சுமி வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றினார். நீயும் சாவு, நானும் சாகிறேன் என்று கூறிய தனசேகரும் உடலில் மண்எண்ணையை ஊற்றினார்.
உடல் முழுக்க மண்எண்ணை வழிந்த நிலையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மகாலட்சுமி திடீரென தீக்குச்சியை உரசி தனது உடலில் போட்டார். இதில் மளமளவென அவரது உடலில் தீப்பிடித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தனசேகர் அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரது உடலிலும் தீப்பற்றியது.
இதனால் வலி தாங்க முடியாமல் இருவரும் அலறி துடித்தனர். இவர்களது சத்தத்தை கேட்டு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த லாவண்யாவும், பிரசாந்தும் ஓடி வந்தனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் ஓடி வந்தனர். இவர்கள் தண்ணீரை எடுத்து தனசேகர், மகாலட்சுமி ஆகியோரின் உடலில் ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் 2 பேரின் உடல்களும் தீயில் கருகி விட்டது. இதைப் பார்த்து லாவண்யாவும், பிரசாந்தும் கதறி அழுதனர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் நீலாங்கரை உதவி கமிஷனர் சங்கர், இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்–இன்ஸ்பெக்டர்கள் கிருபாநிதி, திருநாவுக்கரசு ஆகியோர் விரைந்து சென்று 2 பேரின் உடலையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மகாலட்சுமிக்கும், தனகேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு 12 மணி அளவில் மகாலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இன்று அதிகாலை 3 மணிக்கு தனசேகர் பலியானார்.
இவர்களது பிள்ளைகளான லாவண்யா 6–வது வகுப்பும், பிரசாந்த் 4–வகுப்பும் படிக்கிறார்கள். பெற்றோரை இழந்து இருவரும் அனாதையாகி தவிக்கிறார்கள்.
குடியை கெடுக்கும் குடிப்பழக்கத்தால் கணவன்–மனைவி இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனசேகர், மகாலட்சுமி ஆகியோரின் உறவினர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top