புதுடெல்லி, டிச. 8–
டெல்லி செங்கோட்டை மைதானத்தில் பகவத்கீதை தொடர்பான விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட விஷ்வ இந்து பிரிவுத் தலைவர் அசோக்சிங்கால் இந்துக்களின் புனித நூலாக பகவத் கீதையை தேசிய புனித நூலாக பிரதமர் நரேந்திரமோடி உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:–
கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்ற போது அந்நாட்டு அதிபர் ஒபாமாவுக்கு பகவத் கீதையை பரிசளித்தார். அப்போதே அதற்கு தேசிய புனித நூல் அந்தஸ்து வழங்கப்பட்டுவிட்டது.
அனைவரின் பிரச்சினைகளுக்கும் பதிலையும் தீர்வையும் பகவத்கீதை அளிக்கிறது. இதனால் தான் பாராளுமன்றத்தில் நான் பேசும் போது பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இதற்கான அறிவிப்பு மட்டும் தான் இன்னும் வெளியிடப்படவில்லை. அந்த அறிவிப்பும் வெளியிடப்படும்.
வெளியுறவுத்துறை மந்திரி என்ற முறையில் என் முன் உள்ள சவால்களை பகவத் கீதையின் மூலம் தான் என்னால் எதிர் கொள்ள முடிகிறது. இந்த நூல் எனக்கு வாழ்க்கை முழுவதும் உதவியுள்ளது.
மன அழுத்தத்தை குறைக்க சிலர் மிட்டாய்களையும், சாக்லெட்களையும் சாப்பிடுகின்றனர். இது மன அழுத்தத்தை குறைக்க உதவாது. அதற்கு பதிலாக அவர்கள் பகவத் கீதை படிக்க வேண்டும். இது அவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க உதவும் வாழ்க்கையில் சவால்களை எதிர் கொள்ளவும் தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சுஷ்மாவின் அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மணீஷ்திவாரி கூறியதாவது:– கீதையின் சாரம் என்பது அதன் உள்ளடக்கத்தில் தான் உள்ளதே தவிர அதன் அடையாளத்தில் இல்லை. எனவே கீதையின் போதனையை தீவிரமாக படித்த யாரும் இது போன்ற அர்த்தமற்ற கருத்தை வெளியிடமாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments :
Post a Comment