தாம்பரம் சானட்டோரியத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்சென்னை மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் சாந்தி, மாநில துணைத் தலைவர் லட்சுமணன் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை ரூ. 1000–த்தில் இருந்து ரூ. 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். அதனை பிரதி மாதம் 10–ந் தேதிக்குள் வழங்க வேண்டும். அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
திடீரென அவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல்லாவரம் – தாம்பரம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாம்பரம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்தனர். அவர்களை வேனில் அழைத்து சென்று தாம்பரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
0 comments :
Post a Comment