கோயம்பேடு, டிச. 2–
சென்னை மாநகராட்சி 155–வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சேகர் 11–வது மண்டல குழு தலைவராகவும் உள்ளார்.
இந்த மண்டல குழுவின் கீழ் 143 முதல் 155–வது வார்டு வரை உள்ளது. இந்த மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆழ்வார் திருநகர், ராமாபுரம், காரப்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் அம்மா உணவகம் உள்ளது.
இங்கு பணியாற்றும் பெண்களிடம் மண்டல குழு தலைவர் சேகர் பாலியல் தொல்லை செய்வதாக பெண்கள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் முதல்–அமைச்சர் மற்றும் மாநகர மேயருக்கு புகார் மனுவும் அனுப்பி இருந்தனர். அதன் பிறகும் சேகரின் பாலியல் தொல்லை தொடர்ந்தது.
இதனால் ஆவேசம் அடைந்த அம்மா உணவக பெண்கள் இன்று காலை சேகரை கண்டித்து வளசரவாக்கத்தில் உள்ள மண்டல குழு அலுவலகம் முன்பு இன்று காலை முற்றுகை போராட்டம் நடத்தினர். இதில் 30–க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டனர்.
தலைவருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அலுவலகத்தில் சேகர் இல்லை. அவர் வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று பெண்கள் கூறினார்கள்.
இதுபற்றி அம்மா உணவகம் பெண் ஊழியர் வனிதா கூறும் போது, ‘‘தலைவர் சேகர் அம்மா உணவகத்திற்கு அடிக்கடி வந்தும் அல்லது அங்குள்ள பெண்களை அலுவலகத்திற்கு வர சொல்லியும் வக்கிரமான வார்த்தைகளால் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அவரது எண்ணத்திற்கு உடன்பாடாத பெண்களை சரியாக வேலை செய்யவில்லை என்றும் வேலையை விட்டு நீக்கி விடுவேன்’’ என்றும் மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து முதல்– அமைச்சர் மற்றும் மேயரிடம் புகார் கொடுத்தோம். அதை அறிந்த சேகர் யாரிடம் புகார் செய்தாலும் என்னை ஒன்றும் செய்யமுடியாது என்று மேலும் மிரட்ட தொடங்கினார். இதனால் நாங்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளோம் என்றார். இதே குற்றச்சாட்டை பல பெண்களும் கூறினார்கள்.
0 comments :
Post a Comment